சிக்கல் தீர்ந்தது: மகாராஷ்டிரவில் நாளை புதிய அரசு பதவியேற்பு
வியாழன், 5 நவம்பர் 2009( 14:02 IST )
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே புதிய அரசு அமைப்பதில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து நாளை அசோக் சவான் தலைமையிலான அரசு பதவியேற்கும் என்று இரு கட்சிகளின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுஃல் படேல், அரசில் பங்கேற்பது குறித்து தங்கள் கட்சி சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து புதிய அரசு நாளை பதவியேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சரத் பவாருடன் என்.சி.பி மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் என்.சி.பி-யின் நிலை குறித்து பிரபுஃல் படேல், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான அகமது படேலைச் சந்தித்துப் பேசினார்.
மகாராஷ்டிர விவகாரங்களைக் கவனிக்கும் ஏ.கே. ஆண்டனியுடன் பேசிய பின் முடிவைத் தெரிவிப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே முதல்வர் அசோக் சவான், துணை முதல்வர் சஜன் புஜ்பாலுடன் காங்கிரஸ் - தேசிவாத காங்கிரஸ் கட்சிகளின் தலா 20 அமைச்சர்களும் பதவியேற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.