ஆந்திர மாநில மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த கொன்ட சுரேகா அனுப்பிய பதவி விலகல் கடிதத்தை அம்மாநில ஆளுநர் என்.டி. திவாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.
கடப்பா மக்களவைத் தொகுதி உறுப்பினரும், மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையில் இல்லாத ஆட்சியில் தாம் அமைச்சராக நீடிக்க விரும்பவில்லை என்று கூறி, நேரடியாக ஆளுநர் என்.டி. திவாரிக்கு தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார் சுரேகா.
முதல்வர் கே. ரோசையாவை மீறி நேரடியாக ஆளுநருக்கே ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
என்றாலும் அமைச்சரின் பதவி விலகல் தொடர்பாக முதல்வர் ரோசையாவின் பரிந்துரையை ஆளுநர் கோரினார்.
இதையடுத்து அமைச்சரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறு ஆளுநருக்கு முதல்வர் ரோசையா ஆலோசனை அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் திவாரி, அமைச்சரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டார்.