மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அஜ்மல் கசாப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் கடந்த ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 180க்கும் அதிகமானோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியவர்களில், அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் பாதுகாப்புப் படையினரிடம் உயிருடன் பிடிபட்டான். இதர பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அஜ்மல் கசாப் மீதான வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தபோது, அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்தபோது மும்பை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளை பிணை கைதிகளாக பிடிக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறினான்.
நேற்று 3 வது நாளாக கசாப் அளித்த வாக்கு மூலத்தின்போது, மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும், குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு என்னை யாரும் நிர்ப்பந்திக்கவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை என்றும் தெரிவித்தான். அதோடு, தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக யாராவது கருதினால், தன்னை தூக்கிலிடலாம் என்றும் அவன் தெரிவித்தான்.
எனினும், மும்பை தாக்குதல் சம்பவத்தில் முழுமையான விபரங்களை கசாப் இன்னும் வெளியிடவில்லை என்று அரசு தரப்பில் கருதப்படுகிறது.
இதற்கிடையே, அஜ்மல் கசாப் மீதான வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
|