ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியான் பகுதியில் கடந்த மே மாதம் 29-30ஆம் தேதிகளில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், புதைக்கப்பட்ட நிலோபர், அஸ்யா ஆகிய 2 பெண்களின் உடல்களையும் தோண்டியெடுப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் மிகவும் கடுமையான உத்தரவுகளையும் நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
ஷோபியானில் இளம்பெண்கள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக் குழுவின் அனுமதியின்றி சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த யாரும் ஷோபியானில் இருந்து வெளியேறக்கூடாது என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 பெண்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்ட நாளன்று பேசப்பட்ட அழைப்புகள் குறித்த விவரங்களை அளிப்பதில் மொபைல் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அழைப்புகள் குறித்த விவரங்களை மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீநகர் அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஷாகிதா மிர்-ஆல் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் குழு, தோண்டியெடுக்கப்படும் 2 பெண்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஷோபியானில் 2 பெண்கள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், ஷோபியான் வழக்கில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
|