இந்தியாவுக்கு உலக வங்கி ரூ. 10,560 கோடி (220 கோடி டாலர்) கடனுதவி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலத்தில் இத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் மிக அதிக அளவு கடன் பெற்ற நாடு இந்தியாதான். 2009-ம் ஆண்டிற்குள் 224 கோடி கடன் வழங்கப்படும் என உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்குத் தேவைப்படும் மூலதனத்தை கடனாக வழங்க 40 கோடி டாலரை உலக வங்கி அளித்துள்ளது.
தெற்காசிய நாடுகள் கடந்த நிதி ஆண்டில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாயின. குறிப்பாக உணவு பிரச்னை மற்றும் எரிபொருள் விலையேற்றம் வெகுவாக பாதித்தது என்று உலக வங்கி துணைத் தலைவர் குயெரோ தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்கத்திலிருந்து மீள அவற்றுக்கு பொருளாதார நிதி உதவி தேவை. அப்போதுதான் சரிவிலிருந்து மீள்வதோடு பொருளாதார வளர்ச்சியையும் பெறும். இதைக் கருதியே கடனுதவி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இந்த ஆண்டு 5,800 கோடி டாலர் கடன் வழங்க உலக வங்கி திட்டமிட்டுள்ளது. இன்னும் நாடுகளில் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் தொடர்ந்து இதுபோன்ற உதவிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். |