வரும் 2011ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து மம்தா பானர்ஜி ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறைகூறியிருக்கிறது.
இதுகுறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா, ஆம் மேற்கு வங்க தேர்தலை கருத்தில் கொண்டே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையாக கருதுகிறீர்களா என்று கேட்டபோது, அவர் இந்த பதிலை அளித்தார்.
என்றாலும் பயணிகள் ரயில் கட்டணம், சரக்குக் கட்டணத்தை உயர்த்தாததை ஆச்சார்யாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜாவும் வரவேற்றுள்ளனர்.
பல்வேறு தரப்பு மக்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் வரவேற்றுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்திற்கு பல்வேறு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும், சட்டசபைத் தேர்தலுக்காகத் தான் என்று பாசுதேவ் ஆச்சார்யா குறிப்பிட்டுள்ளார். |