ரயில்வே மருத்துவமனையுடன் இணைந்த ரயில்வே மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக அத்துறைக்கான அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.
மக்களவையில் இன்று ரயில்வே நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ரயில்வே நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்:
ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் தகவல் அளிக்கும் சேவைகள் செய்து தரப்படும்.
முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு பொதுத்துறையுடன் தனியார் நிறுவனங்களும் உதவும்.
ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் குடிதண்ணீர் தரமானதாக இருக்கும் வகையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
பயணிகள் வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ரயில்வே திட்டங்கள் பொருளாதார ரீதியில் லாபமளிக்கக்கூடியதா என்பதை விடவும், சமுதாய அடிப்படையிலான திட்டங்களாக இருக்க வழிவகை செய்யப்படும்.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள ரயில் பயணிகளுக்கு குறுந்தகவல் சேவை (எஸ்.எம்.எஸ்) மூலம் தகவல் தெரிவிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
பெரிய மற்றும் நடுத்தர ரயில் நிலையங்களில் தானியங்கி பொருட்கள் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் ஓடும் ரயில்களில் அதிக திறனுள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு (Double- decker) ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
தபால் நிலையங்கள் மூலம் ரயில்வே டிக்கெட் வழங்க ஏற்பாடு.
பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, சுமார் 130 ரயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறை ஏற்படுத்தப்படும்.
டெல்லி, கொல்கட்டா, மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் 7 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.
பொதுத்துறை - தனியார் பங்களிப்புடன் ரயில்வே மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படும்.
ரயில்வே பணியமர்த்தும் முறையில் சிறுபான்மையினர், மகளிர், பொருளாதாரரீதியில் பின்தங்கியோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.
உடல் ஊனமுற்றோருக்கு பணி வாய்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு ரயில்வே பணியாளர் தேர்வு திட்டம் தொடங்கப்படும்.
நடப்பாண்டில் 18 ஆயிரம் ரயில் பெட்டிகள் (வேகன்கள்) வாங்கப்படும்..
நலிவடைந்துள்ள ரயில்பெட்டி தொழிற்சாலைகளை கனரகத் தொழில்கள் துறை வாங்குவதற்கு உரிய முயற்சிகளை ரயில்வே மேற்கொள்ளும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
|