ரயில் பயணிகள் பாதுகாப்பே ரயில்வேயின் முதல் முன்னுரிமை என்றும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பான சிக்னல் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள வேறு முக்கிய அம்சங்கள் வருமாறு:நாடு முழுவதும் பதற்றமான, பாதுகாப்பு இல்லாத ரயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறை (Intergrated Security Systems) ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலியாக உள்ள தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் (எஸ்.சி/எஸ்.டி) மற்றும் பெண் ஊழியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப சிறப்பு பணியமர்த்துதல் திட்டம் கொண்டுவரப்படும்.நாடு முழுவதும் புதிய 800 ரயில்வே முன்பதிவு மையங்களும், பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை வழங்கும் 300 கவுன்டர்களும் ஏற்படுத்தப்படும்.நாடு முழுவதும் 5 ஆயிரம் தபால் நிலையங்களில் ரயில்வே டிக்கெட்டுகள் வழங்கப்படும்.புத்தக கடைகள், எஸ்.டி.டி பூத்கள் உள்ளிட்ட பல்முனை வணிக வளாகங்கள் ரயில் நிலையங்களில் அமைக்கப்படும்.நீண்டதூர ரயில்களில் குறைந்தது ஒரு மருத்துவர் இடம்பெறுவார்.2 மணி நேரத்திற்கும் மேல் பயணம் செய்யும் ரயில் பயணிகளின் வசதிக்காக விமானங்களில் இருப்பது போன்ற கழிவறைகள் ஏற்படுத்தப்படும்.வளர்ச்சி உள்பட அனைத்திலும் முன்னுதாரணமாக ரயில்வே துறை திகழும். |