2009-10 நிதியாண்டிற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையை படிக்கத் துவங்கிய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தனது இந்த நிதிநிலை அறிக்கை மனித முகம் கொண்டதாக இருக்கும் என்று கூறி நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் துவங்கினார்.
ரயில்வே நிதிநிலை அறிக்கை நமது நாட்டில் உள்ள சமூகத்தின் அடித்தட்டு மக்களையும், ஏழ்மையில் உழல்பவர்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுவதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில்வே நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் மம்தா பானர்ஜி, ரயில்வேயின் ஒவ்வொரு திட்டமும் பொருளாதார ரீதியாக லாபகரமானதா என்கின்ற கொள்கையை சமூக ரீதியாக பயனுள்ளதா என்ற பார்வையில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
ரயில் பயண சரித்திரத்தில் முதல் முறையாக நாடு முழுவதும் புறப்பட்ட இடத்தில் இருந்து சேரும் இடம் வரை எங்கும் நிற்காத ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து டெல்லி, ஹெளராவில் இருந்து மும்பை, டெல்லியில் இருந்து புனே, ஹெளராவில் இருந்து டெல்லி, டெல்லியில் இருந்து அகமதாபாத், கொல்கட்டாவில் இருந்து அமிருத்சர், எர்ணாக்குளத்தில் இருந்து டெல்லி ஆகிய வழித்தடங்கள் உட்பட 12 தடங்களில் இந்த பாய்ண்ட் டூ பாய்ண்ட் ரயில் சேவை இயக்கப்படும்.
மதுரை - ஜோத்பூர் விரைவு ரயில், திருநெல்வேலி வரை நீட்டிக்கப்படுகிறது.
முன்பதிவு அற்ற பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கு மேலும் 3,000 மையங்கள் ரயில் நிலையங்களில் துவக்கப்படும்.
முன்பதிவு அற்ற ரயில் பயணச் சீட்டுகளை நாடு முழுவதிலும் உள்ள 5,000 அஞ்சல் நிலையங்களில் பெற்றுக் கொள்ளும் வசதி அளிக்கப்படும்.
நமது நாட்டில் உள்ள 150 பாதுகாப்பற்ற ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்த ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
2 மணி நேரத்திற்கும் அதிகமான பயண நேரம் உள்ள அனைத்து ரயில்களிலும் விமானங்களில் உள்ளது போன்ற கழிவறை வசதிகள் அமைக்கப்படும்.
ஆண்டிற்கு 500 புதிய பயணப் பெட்டிகளைத் தயாரிக்கக் கூடிய புதிய ரயில்பெட்டித் தொழிற்சாலை ஒன்று பொது - தனியார் கூட்டாண்மையில் நிறுவப்படும்.
முன்பதிவு செய்து கொண்ட பயணிகளுக்கு காத்திருப்போர் பட்டியல் எஸ்.எம்.எஸ். வாயிலாக தெரிவிக்கப்படும்.
2009ஆம் ஆண்டிற்கான சரக்கு போக்குவரத்து இலக்கு 882 மில்லியன் மெட்ரிக் டன்களாக நிர்ணயிக்கப்படுகிறது.
குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இரண்டடுக்கு பயணப் பெட்டிகள் தயாரிக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன் கருதி இஸ்ஸார்ட் என்று அழைக்கப்படும் சிறப்புச் சலுகைத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி, மாதத்திற்கு ரூ.1,500 மட்டுமே வருவாய் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் 100 கி.மீ. தூரம் வரையிலான இடங்களுக்குச் சென்று வருவதற்கான மாதாந்திர பயணச் சீட்டு ரூ.25 க்கு அளிக்கப்படும்.
அரசு அங்கீகார அட்டைப் பெற்றுள்ள பத்திரிக்கையாளர்களுக்கு ரயில் பயணங்களில் அளிக்கப்படும் கட்டணச் சலுகை 30 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது.
மாணவர்களுக்கான பயணக் கட்டணச் சலுகை 60 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது.
|