கர்நாடக மாநிலம் மைசூர் அருகே புறநகர்ப் பகுதியில் மசூதியை சேதப்படுத்தியதாகக் கூறி இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள உதயகிரி என்ற இடத்தில் ஏற்பட்ட மோதலில் ஜபையுல்லா (15), யாசிர் (35), திருப்பதி (40) ஆகிய 3 பேர் கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
க்யாதமரண்ஹள்ளி என்ற இடத்தில் உள்ள அலிமா மசூதி சிலரால் சேதப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து உதயகிரியில் மோதல் வெடித்ததாக தெரிய வந்துள்ளது.
இதில் 3 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். என்றாலும் உதயகிரியில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும், வேறு இடங்களில் மோதல் ஏற்படாமல் தடுக்கவும், கூட்டமாக மக்கள் கூடுவதற்கு அப்பகுதியில் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், மாண்டி, நரசிம்ம ராஜா பகுதியிலும் தடை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மசூதிக்கு அருகே கூடியிருந்தவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
மசூதி சேதப்படுத்தப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் துணை ஆய்வாளர் கூறினார்.
|