வீட்டு வேலைக்காரப் பெண்ணைக் கற்பழித்த வழக்கில் கைதாகி மும்பையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜாவின் காவல் இன்றுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அகுஜாவின் நீதிமன்றக் காவலை வரும் 16ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
நடிகர் அகுஜாவின் வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை, கடந்த மாதம் 14ஆம் தேதியன்று அகுஜா கற்பழித்து விட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையும், அகுஜாவின் டி.என்.ஏ மற்றும் ரத்த மாதிரி பரிசோதனையும், கற்பழிப்பை உறுதி செய்தன.
மேலும் கற்பழிப்பு நடந்தபோது அகுஜா, மது அருந்தியிருக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
இளம்பெண்ணின் பரஸ்பர சம்மதத்துடனேயே இந்த சம்பவம் நடந்ததாகக் கூறியுள்ள அகுஜா, அந்தப் பெண் தன் மீது பலாத்கார கற்பழிப்பு என்று குற்றம்சாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அகுஜாவிற்கு எதிரான குற்றச்சாற்று நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டால், குறைந்தது 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உறுதி என்று தெரிகிறது. |