மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து விலாஸ்ராவ் தேஷ்முக் விலகியதைத் தொடர்ந்து மும்பையில் இன்று நடக்கும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதில், கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்க மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்புத்துறை அமைச்சரும், மராட்டிய மாநில காங்கிரஸ் விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான ஏ.கே.அந்தோணி ஆகியோர் இன்று மும்பை சென்றுள்ளனர்.
அடுத்த முதல்வராகத் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுபவர்களில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பிரித்விராஜ் சவான், அசோக் சவான், நாராயண் ரானே ஆகியோர் அப்பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அடுத்த முதல்வர் தலித் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பாரா அல்லது மராட்டிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பாரா என பிரணாப் முகர்ஜியை செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுபோன்ற அபாயகரமான ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. |