அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் நடத்தி வரும் போராட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென்று பல்வேறு அமைப்புகளும் இணைந்து எடுத்துள்ள முடிவினால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புகிறது.
பொருளாதாரத் தடையை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தி வந்த முழு அடைப்புப் போராட்டம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளதால், கடந்த 11ஆம் தேதி முதல் எட்டு நாட்களாக ஸ்தம்பித்திருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலை திரும்பியது.
பிரிவினைவாத அமைப்புகள், சமூக அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் அகியவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு வழக்கம்போல இயங்கும்.
முழு அடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் சிறிது நிவாரணம் வழங்கும் பொருட்டு போராட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கினாலும், அவற்றின் மீது போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக கறுப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்றும் பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர். இதன்படி இன்று காலை வாகனங்களில் கறுப்புக் கொடிகளைக் காண முடிந்தது.
காஷ்மீரில் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள கூட்டத்தில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், அது மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர்.
|