இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஒப்புதல் தந்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டம் நம்மை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வோம் என்றும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மக்களவையில் அரசு கொண்டு வந்துள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்துவரும் விவாத்த்தில் கலந்து கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, அணு சக்தி ஒப்பந்தம் பற்றிய உண்மைகளை மத்திய அரசு மறைப்பதாக எழுந்த குற்றச்சாற்றுக்களை வன்மையாகக் மறுத்தார்.
"அமெரிக்காவின் ஹைட் சட்டம் பற்றியும், அதை எதிர்ப்பவர்களின் கோரிக்கைகளையும் நாங்கள் புரிந்துள்ளோம். ஹைட் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், அதன் சில பகுதிகள் ஏற்கத்தக்கதல்ல என்று அமெரிக்காவிடம் நாங்கள் தெரிவித்துள்ளோம். ஒருவேளை 123 ஒப்பந்தம் ஹைட் சட்டத்துடன் இணைக்கப்பட்டால், அடுத்தக் கணம்தான் அமெரிக்காவுடன் நாம் நடத்திவரும் பேச்சின் முறிவுப்புள்ளியாக இருக்கும்" என்று பிரணாப் கூறினார்.
”இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தமும், பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் நாம் இறுதி செய்யவுள்ள கண்காணிப்பு ஒப்பந்தமும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் எங்குமே ஹைட் சட்டம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. 123 ஒப்பந்தத்தின் ஒரு பகுதிதான் ஹைட் சட்டம் என்பதை யாராவது நிரூபிக்க முடியுமா? என்று நான் சவால் விடுகிறேன்" என்றார்.
ஹைட் சட்டத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஒப்புக்கொள்வதாகக் கூறிய பிரணாப், அந்தப் பகுதிகளை அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும், நமது நாட்டின் சுதந்திரமான அயலுறவுக் கொள்கைகளில் சமரசத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் இடம் தராது என்றும் கூறினார்.
"ஹைட் சட்டம் பற்றிச் சர்ச்சைகள் ஏற்பட்டவுடன், இடதுசாரிகளின் கவலைகளை நீக்கி அணு சக்தி ஒப்பந்தத்தின் நன்மைகளைப் பற்றி விளக்குவதற்கான முயற்சிகளை பிரதமரும் ஐ.மு.கூ. தலைவர் சோனியா காந்தியும் மேற்கொண்டனர்.
|