"நாம் பூமித் தாயை வணங்குகிறோம். அதற்கு நாம் பூமியைத் தொட முடியாது என்று அர்த்தமா?" என்று சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது.
கடந்த மே 1ஆம் தேதி துவங்கிய சேது சமுத்திரக் கால்வாய் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று நடந்தது.
இவ்வழக்கில் அரசிற்கு எதிராக வாதாடும் இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சொலி சொரப்ஜியை நோக்கிக் கேள்வி எழுப்பிய நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், "நாம் பூமியை வழிபடுகிறோம். அதற்கு நாம் பூமியைத் தொட முடியாது என்று அர்த்தமா? இமயமலையையும் நாம் வணங்குகிறோம். அதற்கு இமயமலையைத் தொட முடியாது என்று அர்த்தமா? விருந்தாவன், மதுராவில் உள்ள கோவர்தன மலைகளை நாம் வணங்குகிறோம். அதற்குக் கோவர்தன மலையில் ஒன்றும் செய்ய முடியாது என்று அர்த்தமா?" என்றார்.
இதற்கு பதிலளித்த மற்றொரு மூத்த வழக்கறிஞர் கே.பராசரன், "இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது மிகவும் கடினம். நீதிபதிகளால் கூட இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது" என்றார்.
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜெ.எம்.பஞ்சால் ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வாதாடிய மூத்த வழக்கறிஞர் சொலி சொரப்ஜி, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனது அல்லது அவளது விருப்பத்திற்கேற்ற மதத்தைப் பின்பற்றவும், அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் சுதந்திரம் அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25 ஆவது பிரிவை மீறும் வகையில், பெருமளவிலான மக்கள் தங்கள் நம்பிக்கையையும், மதத்தையும் பின்பற்றுவதைத் தடுக்கும் வகையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றார்.
|