இதையடுத்து, பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு அவசர அவசரமாகத் தாக்கல் செய்யப்படுவதாகக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமர் சிங் உள்ளிட்ட சமாஜ்வாதிக் கட்சி உறுப்பினர்களுடன் சரத் யாதவ் சேர்ந்து கொண்டார்.
அவர்கள், ஜனநாயக அடிப்படையில் தங்களுக்குப் பேச்சுரிமை மறுக்கப்படுவதாக குற்றம்சாற்றினர்.
விதிகளின்படி, அவையில் சட்ட வரைவு அறிமுகம் செய்யப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அதுகுறித்து உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர்.
இருந்தாலும் அந்த வாதங்களை அவைத் தலைவர் பொருட்படுத்தவில்லை. நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளன்றாவது அமைதி காக்குமாறு அவர் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இட ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு தாக்கல்!
இந்நிலையில், பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட வரைவை அறிமுகம் செய்வதற்காக மத்திய சட்ட அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ் எழுந்தார்.
அப்போது குறுக்கிட்ட அபு ஆசிம் ஆஷ்மி உள்ளிட்ட சமாஜ்வாதிக் கட்சி உறுப்பினர்கள், சட்ட வரைவின் நகலை அமைச்சர் பரத்வாஜின் கையிலிருந்து பிடுங்க முயற்சித்தனர். அமைச்சருக்கு அருகிலிருந்த அமைச்சர்கள் அம்பிகா சோனி, குமாரி ஷெல்ஜா, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், அல்கா பல்ராம் ஆகியோரும் அம்முயற்சியை முறியடித்தனர்.
இதையடுத்து, அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ் சட்ட வரைவை வெற்றிகரமாக குரல் வாக்கெடுப்பின் மூலம் அறிமுகம் செய்தார்.
இதைத் தொடர்ந்து அவை காலவரையின்றித் தள்ளிவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார்.
|