ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா என்பதைக் கண்டறிய எந்த ஆய்வும் நடத்தப்பட்டதாக மத்திய அரசு தனது வாக்குமூலத்தில் கூறவில்லை என்றார் வழக்கறிஞர் வேணுகோபால்.
மற்றொரு மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சிறிராம் குஞ்சு, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றினால் சுனாமி பாதிப்பு அதிகரிக்குமா, பேரிடர் மேலாண்மைப் பணிகள் பாதிக்குமா அல்லது சுற்றுச்சூழல் மாறுமா என்பது உள்ளிட்ட எந்த விடயம் பற்றியும் மத்திய அரசு விரிவான ஆய்வு நடத்தவில்லை என்றார்.
வனஉயிரியல் சட்டம், மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாற்றினார்.
இவ்வழக்கின் முக்கிய மனுதாரரான சுப்பிரமணியம் சாமி, "இத்திட்டத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கும் தொடர்புள்ளது. அதனால்தான் சிறிலங்காவிற்குச் செல்வதற்காக கடவுள் ராமர் ராமர் பாலத்தைக் கட்டினார் என்ற நமது நாட்டின் 80 கோடி மக்களின் நம்பிக்கையையும் உணர்வுகளையும் மீறி இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு அவசரம் காட்டுகிறது" என்றார். முன்னதாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இவ்வழக்கில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலுவையும் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
அதில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் கப்பல்கள், அமைச்சர் டி.ஆர். பாலுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய மீனம் ·பிஷரிஸ் பப்ளிக் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்றும், எனவே இத்திட்டத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய ஆதாயம் உள்ளது என்றும் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
இறுதியில் வாதங்கள் முடிவடையாத நிலையில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 6 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 270 கிலோ மீட்டர் நீளமுள்ள சேது சமுத்திரத்தில் 31 மீட்டர் மட்டுமே ராமர் பாலம் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
|