6. பொதுநலன்: எல்லா நேரங்களிலும் பொதுமக்களின் நலன்களை முன்னிறுத்தி, சட்டம் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டு, திறமையாகவும் வலிமையாகவும் உயர்ந்தபட்சத் தரத்துடனும் செயலாற்றுவதன் மூலம் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் உறுப்பினர்கள் வலுப்படுத்த வேண்டும்.
7. பொறுப்புடைமை: தங்களின் நடவடிக்கைகள் பொறுப்புடைமையின் எல்லாக் கூறுகளையும் பூர்த்தி செய்கிறதா என்று உறுப்பினர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். தங்களின் முடிவுகளுக்கு சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரின் ஒப்புதலையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
8. தன்னலமற்ற செயல்பாடு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் எல்லா முடிவுகளையும் பொதுமக்களின் நலன்களுக்கு உட்பட்டு எடுக்க வேண்டும். இந்த முடிவுகளால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ பொருளாதார ஆதாயங்களோ அல்லது வேறு ஆதாயங்களோ இருக்கக் கூடாது.
9. தலைமை: மக்களவை நடத்தை விதிகளை ஆதரிப்பதுடன் தங்களின் தலைமை மூலம் அவற்றை அமல்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும்.
இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், அதிகாரங்கள், உரிமைகள் உள்ளிட்டவை தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க தனித்தனியாக விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அரசு நிறுவனங்கள், அரசுத் துறைகள், அமைச்சர்கள், நாடாளுமன்றக் குழுக்கள், நாடாளுமன்ற அவைகள் உள்ளிட்டவற்றுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு தொடர்பும் அரசுச் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் வேண்டுகோளை விரிவாகக் குறிப்பிட்டு அரசுத் தலைமைச் செயலாளருக்குத் தெரிவித்தபிறகே அதன்மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
தண்டனைகள்!
விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். பிறகு கண்டனம் தெரிவிக்கப்படும்.இதையடுத்து குறிப்பிட்டகால இடைநீக்கம் தண்டனையாக வழங்கப்படும். இவை எதற்கும் கட்டுப்படாத உறுப்பினர்கள் அவையிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்.
|