ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு கொண்டு வரும் திட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய கருத்து வேற்றுமை முடிவுக்கு வந்தது.
இரு நாடுகளும் அடுத்த ஆண்டில் இருந்து குழாய் பாதை அமைக்கும் பணியை தொடங்குவது என முடிவு செய்தன. குழாய் பாதை அமைக்கும் பணி ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்படும். 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஈரானில் இருந்து இரு நாடுகளும் இயற்கை எரிவாயு பெறுவது என முடிவு செய்துள்ளன.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் குழாய் பாதையில் எரிவாயுவை கொண்டு வருவதற்கான கட்டணத்தை நிர்ணயிப்பதில் கருத்து வேற்றுமை இருந்தது. இதனால் கடந்த வருடம் ஜூன் மாதம் நடந்த பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்க குற்றம் சாட்டியது. இதனால் ஏற்பட்ட பதற்ற நிலையில் சர்வேதச அணுசக்தி முகமையில் அமெரிக்கா கொண்டு வந்த ஈரானுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.
ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா குழாய் பாதை அமைக்கும் திட்டத்தில் பங்கேற்க கூடாது என அமெரிக்கா மறைமுகமாக நிர்பந்தம் செலுத்துவதால், இந்த திட்டத்தில் இருந்து இந்தியா பின்வாங்குதாக முக்கிய அரசியல் கட்சிகள் உட்பட, பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினார்கள்.
இதற்கு ஏற்றார்போல் கடந்த ஒன்பது மாதங்களில் நடந்த ஈரான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டுக்குழு கூட்டத்தில் இந்தியா பங்கேற்கவில்லை. அத்துடன் கடைசி நிமிடத்தில் இந்தியாவின் பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா கூட்டத்தில் பங்கேற்பதை ரத்து செய்தார்.
இந்நிலையில், இந்த திட்டத்தில் இருந்து இந்தியா பின்வாங்குவதை அறிந்த சீனா, ஈரான்-பாகிஸ்தான் குழாய் பாதை திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டியது.
அத்துடன் அமெரிக்க ஆதரவுடன் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் துர்க்மானிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இந்தியா வரை இயற்கை எரிவாயு கொண்டுவரும் குழாய் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி துர்க்மானிஸ்தானத்தில் இருந்து இயற்கை எரிவாயு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்படும்.
இந்த திட்டத்தின் ஆலோசனை கூட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கி சென்ற வாரம் இஸ்லாமாபாத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொள்ள சென்ற பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா பாகிஸ்தானுக்கு சென்றார்.
|