ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றும் அல் - காய்தாவினரை அழிக்கும் பணியை வெற்றிகரமாக முடித்திட தாம் உறுதி பூண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நேற்றிரவு கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போதே ஒபாமா இதனை தெரிவித்தார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு நலன் கருதி அல் - காய்தா மற்றும் அதன் கூட்டாளிகள் ஆப்கானில் செயல்படாத வகையில் அழிக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவும் அதன் கூட்டணி நாட்டுப் படையினரும் ஆப்கானில் தீவிரவாதிகளை நிர்மூலமாக்கி, இறுதியில் அவர்களது உட்கட்டமைப்பு வலைகளை விரைவில் அழித்துவிடுவர்.
இதற்கு ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை நிலவுவது மிகவும் முக்கியமானது என்று ஒபாமா மேலும் கூறினார்.
ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் அமெரிக்க படைகளை அனுப்புவது தொடர்பாக ஒபாமா இன்னும் தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், அவரது மேற்கூறிய பேட்டி கூடுதல் படைகளை அனுப்ப அவர் தயாராகி விட்டதையே காட்டுவதாக உள்ளது என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.