பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு குறுகிய போர் நடத்த இந்தியா திட்டமிட்டு வருவதாக அந்நாடு கூறியுள்ளது.
புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இந்திய இராணு தலைமை தளபதி தீபக் கபூர், தெற்காசியாவில் அணு ஆயுத தொங்கலுக்கு இடையே ஒரு குறுகிய போர் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது இந்த பேச்சை குறிப்பிட்டு, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு குறுகிய போரை நடத்த இந்தியா திட்டமிட்டு, அதற்கான வியூகத்தை வகுத்து வருவதாக பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் அப்துல் பஸித் இன்று தெரிவித்தார்.
தீபக் கபூரின் பேச்சு இந்தியாவின் ஆபத்தான அணு ஆயுத கொள்கையை உறுதிபடுத்துவதாக உள்ளது என்றும்,சர்வதேச சமுதாயம் கபூரின் இந்த பேச்சைக் கவனத்தில் கொள்வதோடு, இந்தியாவின் நீண்ட கால எண்ணத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதே சமயம் பாகிஸ்தான் தனது தேச இறையாண்மையையும், எல்லையையும் பாதுகாக்க முழு திறனுடன் உள்ளது.ஆனால் ஒரு பொறுப்புள்ள நாடு என்ற வகையில், சம அந்தஸ்து மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் தெற்காசியாவில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ பாகிஸ்தான் தொடர்ந்து பாடுபடும் என்று பஸித் மேலும் தெரிவித்தார்.