மும்பை தாக்குதல் : இத்தாலியில் 2 பாகிஸ்தானியர்கள் கைது
ரோம் , சனி, 21 நவம்பர் 2009( 14:58 IST )
மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக இத்தாலியில் பாகிஸ்தானியர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலியிலுள்ள பெரஸ்சியா என்ற இடத்தில் வைத்து தந்தை மற்றும் மகன் ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பண பரிமாற்ற ஏஜென்சி வைத்து நடத்தி வரும் இவர்கள் இரண்டு பேரும், மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பண பரிமாற்றம் செய்து உதவியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மும்பை தாக்குதல் நடைபெற்ற தினமான நவம்பர் 26 ஆம் தேதிக்கு முந்தைய தினம் இவர்கள் இண்டர்நெட் போன் கணக்கு மூலம் பண பரிமாற்றம் செய்துள்ளதாக பெரஸ்சியா பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைமை போலீஸ் அதிகாரி ஸ்டெஃபனோ ஃபொன்ஷி தெரிவித்தார்.
இத்தாலியிலேயே வசிக்காத பாகிஸ்தானியர் ஒருவரது பெயரில் இந்த பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு இத்தாலியிலிருந்து பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு ஏஜென்சியான எப்பிஐ, இத்தாலி காவல் துறையை உஷார்படுத்தியதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையிலேயே மேற்கண்ட விவரம் தெரிய வந்ததாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.