செல்வம் அடைக்கலநாதன் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்
கொழும்பு , சனி, 7 நவம்பர் 2009( 16:21 IST )
இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஒரு மாத காலத் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த புதன்கிழமை நாடு திரும்பியிருந்தார்.அவரிடம் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை விசாரணைக்காக அவரை அழைத்தனர். 8 மணிநேரம் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் அவர் இருப்பிடம் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில்,மீண்டும் நேற்று வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர்,காலை 8 மணியளவில் அங்கு சென்றவேளை தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் வவுனியா டெலோ அலுவலகத்தில் “மைக்ரோ பிஸ்டல் " ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் விசாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.