அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவ தளத்தில் 12 வீரர்களை சுட்டுக்கொன்ற கொலையாளி கோமா நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் பணி உலகிலேயே மிகப்பெரிய ராணுவ தளமான ஃபோர்ட் ஹூட் (Fort Hood) தளத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பும் ராணுவ வீரர்களுக்கு அங்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மேஜர் நிதல் மாலிக் ஹசன் என்பவர் திடீரென 2 கைகளில் துப்பாக்கிகளை எடுத்து ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதில், 12 ராணுவ வீரர்கள் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற டாக்டர் மாலிக் ஹசனை பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் சரமாரியாக சுட்டனர்.
இதில் படுகாயமடைந்த ஹசன்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
அவரிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்பதால் அவரை உயிர் பிழைக்க வைக்க தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இருப்பினும் அவர் கோமா நிலையில் இருப்பதாகவும்,அதே சமயம் சீரான நிலை காணப்படுவதாகவும் அமெரிக்க இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்,பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலு கூறினார்.