ஆஸி. 4 கல்லூரிகள் திடீர் மூடல் : இந்திய மாணவர்கள் பாதிப்பு
மெல்பர்ன், வெள்ளி, 6 நவம்பர் 2009( 15:55 IST )
ஆஸ்ட்ரேலியாவில் நான்கு தனியார் கல்லூரிகள் நேற்றிரவு திடீரென மூடப்பட்டதால் இந்திய மாணவர்கள் உள்பட சுமார் 2,700 மாணவர்கள் தங்களது படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிட்னி மற்றும் மெல்பர்ன் ஆகிய நகரங்களில் உள்ள 4 தனியார் கல்லூரிகளில் அயல்நாட்டு மாணவர்களே பெரும்பாலும் பயின்று வந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு திடீரென இந்த 4 கல்லூரிகளும் மூடப்பட்டன.
மெரிடியன் குழுமத்தால் நடத்தப்படும் இந்த கல்லூரிகளில் பணியாற்றி வந்த பேராசிரியர்கள் தாங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக நேற்றிரவு தங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதாக கூறினர்.
அதே சமயம் மாணவர்களுக்கு இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதால்,அவர்கள் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தனர்.
ஆனால் கல்லூரி வந்தபின்னரே அது மூடப்பட்டுவிட்டது என்ற விவரம் தெரிய வந்து அதிர்ச்சியடைந்தனர்.
இக்கல்லூரிகளில் பயின்று வந்த பெரும்பாலான அயல்நாட்டு மாணவர்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்களாவர்.அவர்களில் பெரும்பான்மையானோர் இந்திய மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
பல மாண்வர்களுக்கு இன்னும் சில வாரங்களில் படிப்பு முடியும் தருவாய் உள்ள நிலையில்,கல்லூரி மூடப்பட்டது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.