இலங்கை : விசாரணைக்காக சென்ற செல்வம் அடைக்கலநாதன் வீடு திரும்பவில்லை
கொழும்பு , வியாழன், 5 நவம்பர் 2009( 19:55 IST )
இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அழைப்பின் பேரில் விசாரணைக்காக சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,விசாரணை முடிவடைந்த பின்னரும் வீடு திரும்பவில்லை என்று செய்தி வெளியாகி உள்ளது.
நேற்று புதன்கிழமை இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய செல்வம் அடைக்கலநாதனை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் விசாரணைகள் நடத்தியிருந்தனர்.அவருடன் சேர்த்து மற்றொரு தமிழ தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சிவாஜிலிங்கமும் விசாரிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் நேற்று மாலை கொழும்பு திவெலவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கட்டிடத்தொகுதியில் சென்ற பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர்,அடைக்கல நாதனைச் சந்தித்துப் பேசிய பின்னர் இன்று காலை விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர்.
இதன் அடிப்படையில் இன்று விசாரணைக்காகச் சென்ற அடைக்கலநாதன் விசாரணைகள் நிறைவடைந்த பின்னரும் வீடு திரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.