இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் வளத்திற்கு ஆதாரமான பிரம்மபுத்திரா நதியின் மீது சீனா அணை கட்டிக்கொண்டிருப்பது உண்மைதான் என்றும், அதனால் இந்தியாவிற்கு நீர் வரத்துப் பாதிக்கப்படாது என்றும் மத்திய நீர்வள அமைச்சர் பி.கே.பன்சால் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பன்சால், “பிரம்மபுத்திரா மீது சீனா ஒரு சிறிய அணை கட்டுகிறது. அது நீர்த் தேக்கம் அல்ல. நமது எல்லையில் இருந்து 1,100 கி.மீ. தூரத்தில் அணை கட்டப்படுகிறது. இப்படிப்பட்ட 15 அணைகளை சீனா கட்டியுள்ளது. அவர்கள் நாட்டில் ஓடும் நதியின் பகுதி மீது நமக்கு எந்த உரிமையும் இல்லை. நம்மைப் பொறுத்தவரை பிரம்மபுத்திரா நதியில் நமக்கு வரவேண்டிய 79 பில்லியன் கன மீட்டர் நீர் வரவேண்டும். அந்த நீர் திசை திருப்பப்படுவதாக எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளார்.