பிரிட்டிஷ் வீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்ற ஆப்கான் போலீஸ்
காபூல் , வியாழன், 5 நவம்பர் 2009( 18:46 IST )
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரிட்டிஷ் படை வீரர் மீது உடன் வந்த ஆப்கான் காவலர் திடீரென சுட்டதில் ஐந்து பிரிட்டிஷ் வீரர்கள் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படையினருடன்,அந்நாடைச் சேர்ந்த ஆப்கான் படை வீரர்களும்,காவலர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
தாலிபான்களின் நடமாட்டம் மற்றும் அவர்களது மறைவிடங்களை கண்டறிய,உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் ஆப்கான் வீரர்களின் உதவி அவர்களுக்கு மிகவும் அவசியமாக உள்ளது.
இந்நிலையில்,கடந்த செவ்வாய்க்கிழமையன்று தாலிபான்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்ட நேட்டோ படையினருடன் உடன் சென்ற ஆப்கான் காவலர் ஒருவர்,நேட்டோ படையில் ஈடுபட்டிருந்த 5 பிரிட்டிஷ் வீரர்களை திடீரென துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரும் இதேபோன்று அமெரிக்க வீரர்களுடன் ரோந்து பணிக்கு சென்ற ஆப்கான் காவலர் ஒருவர்,இரண்டு அமெரிக்க வீரர்களை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.
தாலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஆப்கான் காவலர்கள் சிலரது இந்த போக்கு ஆப்கான் அரசுக்கும்,அமெரிக்க மற்றும் நேட்டோ படையினருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கான் காவல் துறை மற்றும் படையில் தாலிபான்கள் ஊடுருவி விட்டனரோ என்ற சந்தேகமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.