யு.எஸ். விசாரணை பிடியிலிருந்து தப்பினார் சரத்பொன்சேகா ; இலங்கை திரும்பினார்
வாஷிங்டன் / கொழும்பு, புதன், 4 நவம்பர் 2009( 18:55 IST )
போர் குற்றம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளால் இன்று விசாரிக்கப்பட இருந்த இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா,விசாரணையில் சிக்காமல் இலங்கை புறப்பட்டுவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
தனது அமெரிக்க குடியுரிமைக்கான கிரீன் கார்டை புதுப்பிப்பதற்காக அமெரிக்கா சென்ற பொன்சேகாவிடம், கடந்த மே மாதம் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக்கட்ட போரின் போது, இலங்கை இராணுவத்தினர் நடத்திய போர் குற்றங்கள் குறித்து இன்று விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க அதிகாரிகள் செய்திருந்தனர்.
எனினும் அதில் இருந்து தப்பி ஒருவாறாக இன்று அவர் அமெரிக்காவில் இருந்து இலங்கை புறப்பட்டதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால், அமெரிக்க அரசின் முக்கியஸ்தர்களோ இந்த விடயத்தில் எதையும் தெளிவாகக் கூறாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
இலங்கை நேரப்படி இன்று மாலை ஜெனரல் சரத் பொன்சேகா கட்டநாயக்கா விமானநிலையத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இவரின் வருகையையொட்டி ஏராளமான பத்திரிகையாளர்கள் கொழும்பு விமான நிலையத்தில் குவிந்துள்ள்னர்.
இதனிடையே பொன்சேகா இலங்கை புறப்பட்டுவிட்டதை இலங்கை நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் ஜேவிபி உறுப்பினர் சாமந்தா வித்யரத்னேவும் இன்று உறுதிபடுத்தினார்.
இலங்கை நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு அமெரிக்க அதிகாரிகளை சந்திக்குமாறு பொன்சேகாவிடம் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும்,ஆனால் அவர் காலை 11 மணிக்கே கொழும்பு புறப்பட்டுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில்,அமெரிக்க அரசு தலைமைக்கு தெரியாமல் பொன்சேகா அங்கிருந்து இலங்கை புறப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
பொன்சேகா விடயத்தில் இலங்கைக்கு உதவுமாறு கோரி அதிபர் ராஜபக்ச தூதர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி வந்ததாக செய்தி வெளியான நிலையில்,இதனையடுத்தே இந்தியா தலையீட்டின் பேரில் பொன்சேகா அமெரிக்க விசாரணை பிடியிலிருந்து தப்பியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.