வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 26 பேர் பலியாகினர்.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கைபர் பழங்குடியினப் பகுதியையொட்டிய எல்லைப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பாகிஸ்தான் இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளானது ரஷ்ய தயாரிப்பான எம்ஐ - 17 ரக ஹெலிகாப்டர் என்றும் , தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அந்த அதிகாரி கூறியபோதிலும் , தாங்கள்தான் அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தாலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
தெற்கு வாசிரிஸ்தான் பகுதியில் தாலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே தாங்கள் இந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக ஊடகம் ஒன்றை தொடர்பு கொண்டு தாலிபான் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. |