உயிரியல் வாழ்வில் நாம் இதுபோன்ற தலை கீழ் நிகழ்வை இது வரை கண்டிருக்க வாய்ப்பில்லை. தவளைகளை பாம்புகள் விழுங்குவது தினசரி நிகழ்வு, ஆனால் தவளை ஒன்று முழு நீள பாம்பை விழுங்குவதை சீனாவில் உள்ள சிச்சுவான் பகுதியில் சுற்றுலா பயணி ஒருவர் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார்.
சிச்சுவானில் உள்ள கிங்செங் மலைப் பூங்காவில் இந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது. ரேன் லொங்ஸாங் என்ற பயணி எதேச்சையாக தான் இந்த அதிசய தலை கீழ் நிகழ்வை கண்டு அதிர்ந்து விட்டேன் என்று பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தன்னிடம் கேமரா இருந்ததால் அதனைத் தான் படம் பிடித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
"நான் மலைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தேன், அங்கு தவளை ஒன்று முழு நீள பாம்பை விழுங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தேன், 5 நிமிடங்களில் முழுப் பாம்பையும் தவளை தின்று முடித்து விட்டது.
இது குறித்து உள்ளூர் விலங்கியல் ஆய்வாளர் ஒருவரும் தனது ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளார். தனக்கு தெரிந்தவரை தவளை, பாம்பை சாப்பிடுவது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார் அவர்.
வேட்டையாடலுக்கு பலியாகும் ஒரு உயிரி வேட்டையாடும் ஒரு உயிரினத்தை விழுங்கிய தலைகீழ் சம்பவம் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. |