வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இப்போது தொடங்கியிருக்கும் கட்டுமாணப் பணிகள் , இந்த முகாம்களை நிரந்தரமாக வைத்திருப்பதற்கு அந்நாட்டு அரசு முற்பட்டுள்ளதா என மனிதாபிமானப் பணியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அகதிகளை இந்தத் தடுப்பு முகாம்களில் மூன்று வருட காலத்துக்குத் தடுத்துவைத்திருக்கும் திட்டம் ஒன்றையே அரசு தொடக்கத்தில் வைத்திருந்தது. அகதிகளில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் இருக்கின்றானரா என்பதைக் கண்டறிவதற்கும், வன்னியில் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்த பகுதிகளில் கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுவதற்கும் இந்தக் கால அவகாசம் தேவை என அரசு தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.இந்தக் காலம் ஐந்து வருடங்கள் வரையில் நீடிக்கலாம் எனவும் சொல்லப்பட்டது.
இருந்தபோதிலும் உதவி வழங்கும் நாடுகளின் கடுமையான அழுத்தம் காரணமாகவும், முட்கம்பி வேலிகளை தடுப்பு முகாம்களுடன் ஒப்பிட்டு வெளியிடப்படும் கருத்துக்களையடுத்தும் இந்த அகதிகளில் 80 வீதமானவர்களை இந்த வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்துவதற்கு அரசு இணக்கம் தெரிவித்தது.இதற்காக 180 நாள் வேலைத் திட்டம் ஒன்றும் தம்மிடம் இருப்பதாகவும் அரசு அறிவித்திருந்தது.
இருந்தபோதிலும் இந்த முகாம்களுக்குள் தற்போது தொடங்கியிருக்கும் கட்டுமாணப் பணிகள் இவர்களை நிரந்தரமாகவே முகாம்களுக்குள் வைத்திருக்கும் திட்டத்துடன் அரசு செயற்படுகின்றதா என்ற கேள்வியை எழுப்புவதாக உதவி நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டல்களை மீறுவதாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், அகதிகளை அதிக காலத்துக்கு வைத்திருக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அகதிகளுக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளையும் வழங்காமல் இந்த நிரந்தரக் கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கு அவர்களையே அதிகாரிகள் பயன்படுத்துவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டல்களை மீறுவதாக அமைந்திருக்கின்றது எனவும் லண்டன் 'ரைம்ஸ்' நாளேடு இது தொடர்பாக வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி ஒன்றில் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பான ஆதாரங்களைக் கொண்டுள்ள ஆவணங்களும் தம்மிடம் இருப்பதாகவும் 'லண்டன் ரைம்ஸ்' தெரிவித்திருக்கின்றது. |