அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா போட்டியிட்டதிலிருந்தே அந்நாடு மீதான ரஷ்யர்களின் கண்ணோட்டம் மாறியுள்ளது என்று கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அடுத்த வாரம் ரஷ்யா வரவுள்ள நிலையில், ரஷ்யர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரிய வந்துள்ளது.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தவர்களில் 46 சதவீதம் பேர் அமெரிக்கா குறித்து நல்லவிதமான கருத்தையே தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் பொதுமக்கள் கருத்து ஆய்வு மையம் கடந்த ஜூன் மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடத்திய கருத்துக்கணிப்பில் மேற்கண்ட தகவல் தெரியவந்துள்ளது.46 சதவீதம் பேர் அமெரிக்கா குறித்து சாதகமாக கூறியிருந்தாலும் , 33 சதவீத்ம பேர் எதிரான கருத்து தெரிவித்துள்ளனர்.22 சதவீதம் பேர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேவேளை கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் , ஜார்ஜியாவில் நடந்த போர் காரணமாக அமெரிக்கா - ரஷ்யா இடையேயான உறவில் கடும் மோதல் இருந்து வந்த நிலையில், அப்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 22 சதவீதம் ரஷ்யர்கள் மட்டுமே அமெரிக்கா குறித்து சாதகமாக கூறியிருந்தனர். 65 சதவீதம் பேர் அமெரிக்கா குறித்து எதிராகவே கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகது.
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர், அமெரிக்கா குறித்து பல நாடுகளிடையே ஏற்பட்டுள்ள எதிரான எண்ணத்தைப் போக்கும் வகையில், மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகளே இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. |