
இலங்கையின் வன்னிப் பகுதியில் சிறிலங்கப் படையினர் கடந்த 2 நாட்களாக நடத்தி வரும் தொடர் தாக்குதலில் 1,700 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைபுலிகளின் அரசியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போர்ப் பகுதியில் கடும் உணவுப் பஞ்சம், மருத்துவ வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமானப் பிரச்சனை மேலும் மோசமடைந்து உள்ளதாக புலிகள் குற்றம்சாற்றியுள்ளனர்.
சர்வதேச உணவுக் கழகம் சார்பில் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களை கொண்டு வந்த செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலை போர்ப் பகுதிக்குள் அனுமதிக்க நாங்கள் (புலிகள்) அனுமதி அளித்த போதும், சிறிலங்க அரசு அனுமதிக்காத காரணத்தால் அக்கப்பல் திரும்பிச் சென்று விட்டதாக புலிகள் கூறியுள்ளனர்.
இதேபோல் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக வந்த கப்பலுக்கும் சிறிலங்க அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
வன்னி பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனைகள் மீது சிறிலங்கப் படையினர் கடந்த 2 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு சிகிச்சை பெற்று வரும் 1,400க்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற வழியின்றி தவித்து வருகின்றனர். மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் உயிருக்கு பயந்து பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
சர்வதேச சமூகம் மற்றும் தலைவர்களின் வேண்டுகோளை புறக்கணித்து, பொதுமக்கள் அதிகம் வாழும் இடங்களின் மீது சிறிலங்கப் படையினர் தொடர்ந்து கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
படையினரின் தாக்குதலில் பலியாகும் அப்பாவிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றே சர்வதேச சமூகத்திற்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் ஆதரவு அளிக்க விடுதலைப்புலிகள் தயாராக உள்ளோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|