இலங்கையின் போர்ப்பகுதியில் வாழும் அப்பாவி மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்ற வாக்குறுதியை சிறிலங்க அரசாங்கம் மீறிவிட்டதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு குற்றம்சாற்றியுள்ளது.
பாதுகாப்பு வலயப் பகுதிகளின் செயற்கைக்கோள் புகைப்படமும், அப்பகுதியில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலமும் இதற்குச் சான்றாக உள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆசிய கண்டத்திற்கான இயக்குனர் பிராட் ஆடம்ஸ், செயற்கைக்கோள் புகைப்படம், சாட்சிகளின் வாக்குமூலம் ஆகியவை மூலம் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் கடுமையான ஆயுதத் தாக்குதல் தொடர்வது தெரிய வருகிறது என்றார்.
அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட தாக்கங்கள் தெளிவாக தெரிவதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
கடந்த மே 9ஆம் தேதி முதல் சிறிலங்கப் படையினர் நடத்தி வரும் எறிகணைத் தாக்குதலுக்கு 400 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் தகவல்களை மேற்கோள்காட்டி மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. |