இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான யுனிசெஃப் எச்சரித்துள்ளது.
சில சதுர கி.மீ. பரப்பளவுள்ள சிறிய நிலப்பரப்பில் 50 ஆயிரம் மக்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலைமையில்- சிறிலங்கா ராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறது. அங்குள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை என்றால் மேலும் பெருளவிலான சிறுவர்கள் கொல்லப்படுவார்கள் என யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியாவுக்கான பிராந்தியப் கணிப்பாளர் டதனியல் ரூல் எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களில் அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா. மற்றும் ஏனைய மனிதநேய அமைப்புக்களின் மதிப்பீடுகளின் படி கடந்த 5 மாத காலத்தில் மட்டும் 10,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இப்பிரச்சனை தொடர்பாக உலகம் நெருக்கமாக கவனித்துக் கொண்டிருக்கின்றது என ஐ.நா. செயலர் பான்-கி-மூன் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். இங்கு இடம்பெற்றிருக்கும் பிந்தைய போர், சிறுவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது எனவும் ரூல் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா படை தங்களின் ராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியிருக்கும் யுனிசெஃப் அமைப்பு, தீவிரமான போர் இடம்பெறும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு விடுதலைப் புலிகளையும் கோரிக்கை விடுத்துள்ளது.
போர்ப் பகுதிகளுக்குள் உள்ள மக்களின் ஆபத்தான வாழ்க்கை நிலை தொடர்பாகவும் யுனிசெஃப் எச்சரித்துள்ளது. இங்கு மருந்து, உணவுப் பொருட்களுக்கும் சுத்தமான குடிநீருக்கும் காணப்படும் கடும் தட்டுப்பாடு மக்களுடைய அவல நிலைமையை மேலும் மோசமாக்குகிறது எனவும் யுனிசெப்பின் பிரந்தியப் பணிப்பாளர் கூறியுள்ளார். |