பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாகவே உள்ளன என்று கூறியுள்ள அந்நாட்டு அதிபர் சர்தாரி, இதுகுறித்து அமெரிக்கா கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான புதிய கொள்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, அந்நாட்டு அதிபர்கள் ஜர்தாரி மற்றும் கர்சாய் இருவரும் அமெரிக்க வந்துள்ளனர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க பத்திரிகை ஒன்று, "பாகிஸ்தான் ராணுவத்தினரில் பலர் தாலிபன் பயங்கரவாதிகளின் அனுதாபிகளாக உள்ளனர் என்றும், எனவே அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றும் அபாயம் உள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜர்தாரி, "பாகிஸ்தானில் சுமார் 7 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். அப்படி இருக்கும்போது, பயங்கரவாதிகள் எப்படி அணு ஆயுதங்களை கைப்பற்ற முடியும்?" என்றார்.
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர், தாலிபன் பயங்கரவாதிகளின் அனுதாபிகளாக இருப்பதாக கூறப்படுகிறது. இனம், மொழி, ஒரே கடவுள் என்ற அடிப்படையில் சில ஒற்றுமைகள் இருக்கலாம். அதற்காக, பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் யாருக்கும் அனுதாபம் ஏற்படவில்லை என்றும் ஜர்தாரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் மிகவும் பாதுகாப்பாகவே உள்ளன என்று கூறிய அவர், இதுகுறித்து அமெரிக்கா கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
|