
இலங்கையின் முல்லைத்தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளின் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான்வழி தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,374க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், சாளம்பன், ஒற்றைப்பனையடி மற்றும் ஐ.பி.சி வீதி ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று பிற்பகல் ஒரு மணி வரை எறிகணை, வெடிகணை மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியதாக புதினம் செய்தி தெரிவிக்கிறது.
இத்தாக்குதலில் சிறிலங்கப் படையினரால் 2,600 குறுந்தூர பீரங்கி குண்டுகள், ஆயிரம் நெடுந்தூர பீரங்கி குண்டுகள், 2,500 இடைத்தூர பீரங்கி குண்டுகள் மக்கள் வாழ்விடங்கள் மீது வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், சிறிலங்கா வான்படையும் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் கொத்துக்குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் இயங்கி வரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சிலரும் இதில் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைப் பகுதியை நோக்கி சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களிலும் 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் இயங்கி வரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் 428 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நட்டாங்கண்டல் மருத்துவமனையில் 618 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர். திலீபன் மருத்துவமனையில் 328 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.
சிறிலங்கப் படையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் பிணக்காடாக காட்சியளிப்பதாகவும் அப்பகுதி முழுவதும் மரண ஓலமும், அவலக்குரலும் கேட்பதாகவும் புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
|