
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் மீது சிறிலங்க ராணுவத்தின் முப்படைகளும் இணைந்து நேற்று நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 272 அப்பாவிப் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 3.45 மணியளவில் புதுக்குடியிருப்புக்கு கிழக்கே உள்ள இரட்டை வாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது சிறிலங்காவின் ராணுவத்தினரும், கடற்படையினரும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதேவேளையில் வான்படையின் வானூர்திகள் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களையும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்தியதாக புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியவாறு முன்நகர்வு முயற்சியை சிறிலங்க படையினர் மேற்கொண்டனர். இத்தாக்குதல்களில் மக்களுக்கு அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை 8.30 மணி வரை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் 8 முறை இப்பகுதிக்கு வந்து கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்திச் சென்றுள்ளன. இதன் பின்னரும் வான்குண்டு வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும். இந்தத் தாக்குதல்களில் 272 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள குடியிருப்புக்களை நோக்கி நேற்று காலை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் சாளம்பன் என்ற இடத்தில் மட்டும் 37 பேர் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி சிறிலங்கா கடற்படை கப்பல்களில் இருந்து நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 172 பேர் காயமடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களைத் தொடர்ந்து கனரக ஆயுதங்களையும் வான் தாக்குதல்களையும் நடத்தப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் நேற்று பிற்பகல் அறிவித்த பின்னரும், அதுபோன்ற தாக்குதல்களை சிறிலங்க படையினர் தொடர்ந்து நடத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் குற்றம்சாற்றியுள்ளார்.
|