ஐ. நா. வானிலை மாற்றக் குழு விடுத்த புவி வெப்பமடைதல் பற்றிய எச்சரிக்கைகளின் முழு விளைவை உலகம் சந்திப்பதற்கு இன்னமும் சில ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போது நமது நாட்டில் அதிகரித்து வரும் வெப்பம், தாமதாகும் மழை, அணைக்கட்டுகளில் நீர் மட்ட நிலை போன்றவற்றால் மத்திய அரசு கவலையடைந்துள்ளது.தென் மேற்குப் பருவமழை தாமதிப்பதால் ஏற்படும் வேளாண் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட அதன் தொடர்பாக எழக்கூடிய பல்வேறு பாதிப்புகளை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சக அதிகாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்தக் காலக்கட்டத்தில் துவங்கியிருக்க வேண்டிய மழை இன்னமும் துவங்காமல் இருப்பது பல மாநிலங்களை கவலையடையச் செய்துள்ளது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென் மேற்குப் பருவ மழையை நம்பி சுமார் 23.5 கோடி விவசாயிகள் உள்ளனர். இந்த மழையால் விளையும் விவசாய உற்பத்தி நாட்டின் ஒட்டுமொத்த உள் நாட்டு உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்துவருகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஜூன்-செப்டம்பர் மாதங்களில் மழை பொய்த்துப் போனால் என்ன ஆகும் என்ற கவலை எழுந்துள்ளது.இந்த 4 மாத காலத்திற்கான வானிலை அறிக்கையை விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் முன்னிலையில் இன்று புது டெல்லியில் அரசு வெளியிடுகிறது. |