இமயமலைத் தொடரில் உருவாகும் ஆறுகளால் பயன்பெறும் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள், பருவநிலை மாற்றத்தினால் இமயமலையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தங்களிடம் உள்ள ஆராய்ச்சித் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இமயமலைத் தொடர் பற்றிய ஆதாரத்துடன் கூடிய விவரங்கள் போதுமான அளவில் இல்லாத காரணத்தால், அம்மலைத் தொடரில் உருவாகும் ஆறுகளை மேம்படுத்தும் திட்டங்கள், நீர்ப் பாசனத் திட்டங்கள், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கிடும் பணிகள் உள்ளிட்டவை முழுமையடைவது கேள்விக்குறியாகி உள்ளது என்று அவர்கள் கூறினர்.
இமயமலைத் தொடரில் உருவாகும் ஆறுகளால் பயன்பெறும் நாடுகள், இமயமலைப் பகுதிகள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதிலும் அவற்றைப் பகிர்ந்து கொள்வதிலும் ஒத்துழைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ''இமயமலையின் ஆறுகள்" என்ற தலைப்பில் புது டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற வல்லுநர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
பருவநிலை மாற்றத்தினால் அதிகளவில் பாதிக்கப்படும் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், சீனா, ஆஃப்கானிஸ்தான், பூடான் ஆகிய நாடுகள், இமயமலை பற்றிய தகவல்களைத் திரட்டுவதிலும் அவற்றைப் பகிர்ந்துகொள்வதிலும் ஒன்றுபட்டுச் செயல்படுவதற்கு உரிய காலம் இதுதான் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த மாநாட்டில் பேசிய உலக வங்கியின் சுற்றுச்சூழல் வல்லுநர் சஞ்சய் பகுஜா, இமயமலையில் உருவாகும் ஆறுகளை அதிகம் சார்ந்திருப்பது இந்தியாதான்- கங்கை மற்றும் பிரம்மபுத்திரா- கங்கையிடம் 40 விழுக்காடு பாசன நிலங்கள் உள்ளன, பிரம்மபுத்திராவிடம் 40 விழுக்காடு தாது வளங்கள் உள்ளன என்றார்.
ஆனால், இந்த ஆறுகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் எல்லாப் பாசனத் திட்டங்களும் முழுமையடைவதில்லை. எதிர்காலத் திட்டங்களை உருவாக்குவதும் கடினமாக உள்ளது. ஏனெனில், அவை பயணிக்கும் பகுதிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இல்லை என்றார் அவர்.
|