முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » நாடும் நடப்பும் » சிமெண்ட் விற்பனையில் முறைகேடு: 11 நிறுவனங்களுக்கு ரூ.6,300 கோடி அபராதம்!
(Over Rs.6,300 Crore Penalty Slapped on 11 Cement Firms for Cartel Sale)
சிமெண்ட் விற்பனையில் முறைகேடு: 11 நிறுவனங்களுக்கு ரூ.6,300 கோடி அபராதம்!
வெள்ளி, 22 ஜூன் 2012( 13:39 IST )
இந்திய கட்டிடநிறுவன உரிமையாளர்கள் கூட்டமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட இந்திய சந்தைப் போட்டி ஆணையம் இந்தியா சிமெண்ட்ஸ் உள்ளிட்ட 11 மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.6,300 கோடி அபராதம் விதித்தது.
2009- 10. 2010- 11 ஆம் ஆண்டு லாபங்களில் 0.5 மடங்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும் 90 நாட்களுக்குள் இந்த அபராதத் தொகையை செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஆங்காங்கே ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கட்டிடங்கள் பெருகப் பெருக சிமெண்டுகளுக்கான தேவைகள் பெருகிவருகின்றன.
இதனைக் கண்ட பெரிய சிமெண்ட் நிறுவனங்கள் வேண்டுமென்றே சப்ளையை மட்டுப்படுத்தி போலி கிராக்கியை சந்தையில் உருவாக்கி அதிக விலைக்கு சிமெண்டு மூட்டைகளை விற்று வந்தன.
நியாயமான சந்தையில் போட்டிகளின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் விலைக்கும் மற்றொரு நிறுவனத்தின் விலைக்கும் வித்தியாசங்கள் இருக்கும், மேலும் ஒவ்வொரு கம்பெனியும் சந்தையில் தங்களது பொருட்களை விற்க சிறப்புச் சலுகை திட்டங்களை வைத்திருக்கும்.
ஆனால் இந்த சந்தைப் போட்டி விதிகளுக்கு எதிராக ஒப்பந்தம் செய்து கொண்டு 11 நிறுவனங்களும் சப்ளையை கட் செய்வது கிராக்கியை அதிகமாகி விட்டு அதிக விலை விற்பது என்ற முறையற்ற வியாபாரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
11 நிறுவனங்களுடன் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் வருமாறு:
ஏசிசி, அம்புஜ சிமெண்ட்ஸ், அல்ட்ரா டெக், கிராசிம் சிமெண்ட்ஸ் (இது தற்போது அல்ட்ரா டெக்குடன் இணைக்கப்பட்டது) ஜே.கே. சிமெண்ட்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், மெட்ராஸ் சிமெண்ட்ஸ், செஞ்சுரி சிமெண்ட்ஸ், பினானி சிமெண்ட்ஸ், லஃபராஜ் இந்தியா, ஜேபீ சிமெண்ட்ஸ்.
இதில் ஜெய்பிரகாஷ் சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக ரூ.1,323.6 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆதித்யா பிர்லாவின் அல்ட்ரா டெக் நிறுவனந்திற்கு ரூ.1,175.49 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதங்களினால் சிமெண்ட் நிறுவனங்களின் பங்கு விலைகள் நேற்று பங்குச் சந்தையில் சற்றே சரிவு கண்டன.
ஆனால் வழக்கம் போல் சிமெண்ட் நிறுவனங்கள் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளன.
ரியல் எஸ்டேட் அதிபர்களே கொள்ளை அடிக்கின்றனர் என்றால் அவர்களையும் கொள்ளையடிக்கும் கும்பலாக இருக்கிறது சிமெண்ட் நிறுவனங்கள்!