ஊழலிற்கு எதிரான லோக் பால் சட்டத்தை 10க்கும் மேற்பட்ட தடவைகள் அறிமுகம் செய்தும், அதனை நிறைவேற்றாத காரணத்தினால் அரசின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை இழந்ததன் வெளிப்பாடே அண்ணா ஹசாரே மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு பெருகிவரும் ஆதரவு என்று தலைசிறந்த நாடாளுமன்றவாதியாகத் திகழந்த இரா.செழியன் கூறினார்.
அண்ணா ஹசாரே நடத்திவரும் போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ள இரா.செழியன், ஜன் லோக்பால் சட்டத்திற்கு உள்ள அவசியத்தை வலியுறுத்த தமிழ்.வெப்துனியா.காம் ஆசிரியர் கா.அய்யநாதனுடன் பேசினார்.
தமிழ்.வெப்துனியா.காம்: ஊழலிற்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்கள். அண்ணா ஹசாரேயின் போராட்டத்திற்கு தென் மாநிலங்களில் அந்த அளவிற்கு ஆதரவற்ற நிலையில், தாங்கள் முன்சென்று ஆதரவளித்திருப்பது அந்தப் போராட்டத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. அண்ணா ஹசாரேயின் போராட்டத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், அதன் அவசியம் என்ன?
FILE
இரா.செழியன்: 2ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என்று இந்த நாட்டை உலுக்கிலுள்ள கொடூரமான ஊழல்கள் அனைத்திற்கும் இன்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணம், பொறுப்பு. இந்தியா விடுதலைப் பெற்றதற்குப் பிறகு இந்த அளவிற்கு பொதுச் சொத்து முன்னெப்போதும் கொள்ளையடிக்கப்பட்டதில்லை. அந்த அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட கோவத்தின் அடையாளமாகவே அண்ணா ஹசாரே வடிவெடுத்துள்ளார். அவர் ஊழலிற்கு எதிராக தான் பிறந்த மராட்டிய மண்ணில் போராடியவர். இன்று ராம் லீலா மைதானத்தில் ஊழலிற்கு எதிராக அவர் தொடங்கியுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இந்திய மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஊழலிற்கு எதிராக பரவலாக உருவெடுத்துவரும் ஒரு பெரும் இயக்கத்தின் வடிவமே இந்த உண்ணாவிரதப் போராட்டமாகும்.
இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். 1969ஆம் ஆண்டு முதல் ஊழல் ஒழிக்க உருவாக்கப்பட்ட லோக்பால் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் 10 முறை அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால், அது ஒரு அதிகாரமிக்க, முழுமையான சட்டமாக அறிமுகப்படுத்தப்படவும் இல்லை, நிறைவேற்றப்படவும் இல்லை. இதுவே அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் ஊழலிற்கு எதிரான ஒரு அதிகாரமிக்கச் சட்டத்திற்கான ஆதரவை உருவாக்கியுள்ளது.