முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா மீதான 2ஜி ஊழல் குற்றச்சாற்றால், திமுகவே ஆட்டம் கண்டுள்ள நிலையில், ராசாவின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்வியுடன் கடந்த கால நிகழ்வுகளை திரும்பி பார்த்தால், அப்படி ஒன்றும் அவரது நிலை மோசமாகாது என்றே தெரிகிறது.
தமிழகத்தில் ஊழல் குற்றச்சாற்றுக்கு ஆளான் பல முன்னாள் அமைச்சர்கள், அரசிய தலைவர்கள் மட்டுமல்லாது, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்த அரசியல் புள்ளிகள் கூட, அதே கட்சியிலோ அல்லது மாற்று கட்சியிலோ கன ஜோராக வலம் வந்து கொண்டிருப்பதை காணலாம்.
இதற்கு கடந்த கால உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.
1991-96 ஆம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் அங்கம் வகித்த பல முன்னாள் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது பின்னர் வந்த திமுக ஆட்சியில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கென்றே பல தனி நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டன. வழக்கு விசாரணைகளின் முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லை என்றோ அல்லது குற்றச்சாற்றை நிரூபிக்க தவறிவிட்டதாகவோ கூறி குற்றச்சாற்றுக்கு ஆளான பலரும் விடுவிக்கப்பட்டனர்.
அதே சமயம் ஒரு சிலர் மீதான குற்றச்சாற்றுக்கள் நிரூபிக்கப்பட்டு, சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.ஆனால் அப்படி சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் கூட இன்று தங்களது மாவட்டத்தில் சக்திமிக்க அரசியல் தலைவராகவும்,மாநில அளவில் முக்கிய அரசியல் புள்ளியாகவும் அரசியல் செய்துகொண்டிருக்கின்றனர்.