தங்களுக்கு கழிவறை வசதியில்லை என்றும், இரவு நேரத்தில் காட்டிற்குச் சென்று - பூச்சி, பாம்பு, யானை அச்சுறுத்தல்களுக்கு இடையே - கழிக்கச் செல்ல வேண்டியதுள்ளது என்றும் பெண்கள் கூறினர். ஆனால் இங்குள்ள கிராமங்களுக்கு இடையே இராணுவ முகாம் நிரந்தரமாக அமைக்க கான்கிரீட் கட்டடங்கள் எழுப்பும் வேலை நடைபெற்று வருகிறது!
ஆனால் மூசாலையில் இவர்களைக் குடியமர்த்த ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது நிர்வாகம். ஆனால் சாலை வசதிகள் கூட இல்லை!
கள்ளிமோடை என்ற இடத்தில் உள்ள தற்காலிக முகாமைக் கண்டோம். அங்கு நாங்கள் கேட்ட சத்தம் பயங்கரமாக இருந்தது. அங்கு இரண்டு தமிழ் பேசும் நபர்கள் பேருந்தில் வந்திறங்கும் மக்களை சோதனை செய்வதாகக் கூறினர். அவர்களை அழைத்து வந்த பன்னாட்டு இடம்பெயர்வு அமைப்பினர் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டதற்கு, எவரும் இல்லை என்று கிண்டலாக ஒருவர் பதிலளித்தார்.
சிறிது நேரத்தில் பேருந்தில் ஏற மறுத்து ஒரு பெண் அடம் பிடித்தார். அவரை மற்றவர்கள் சாந்தப்படுத்தி பேருந்தில் ஏற்றினர். “இப்போது புரிகிறதா ஏன் அந்தப் பெண் பேருந்தில் ஏற மறுக்கிறார் என்று” என அந்த நபர் என்னைப் பார்த்துக் கூறினார். தங்கள் வாழ்விடங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பேருந்தில் ஏற்றப்படுவோரை பல இடங்களில் இவ்வாறு சோதிக்கின்றனர் என்றும், அப்போது பலர் கடத்தப்படுகின்றனர் அல்லது காணாமல் போகின்றனர் என்று அங்கு பணியாற்றிடும் ஒரு தொண்டு நிறுவன ஊழியர் கூறினார்.
அடம்பனில் எந்த கட்டடமும் இல்லை, அங்கு கொண்டு வரப்பட்ட மக்கள் அனைவரும் அரசு கட்டடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த கட்டடத்திற்கு மேற்கூரை இல்லை, சுற்றிலும் வனம். சிலர் கூடாரத்தில் தங்கியிருந்தனர். சிலர் மரங்களின் கீழ் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் சென்றிருந்தபோது மன்னாரில் தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்தது.
FILE
உயிலங்குளம் அருகே கண்ணி வெடி எச்சரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள குருகுலம் பள்ளிக்கு மாணவர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். கூரையற்ற பள்ளி அது!
நாங்கள் தனது குழந்தையோடு மட்டுமே இருந்த பல பெண்களைப் பார்த்தோம். தனக்கு அளிக்கப்பட்ட தகரங்களில் ஆடையின் ஒரு முனையைக் கட்டி, மற்றோரு முனையை மரத்தில் கட்டி, அந்தத் தொட்டிலில் குழந்தையை இட்டுவிட்டு, வீடு கட்ட மரம் எடுக்க காட்டை நோக்கி நடந்தாள் ஒரு பெண்.
உழைத்துத் தங்களைக் காப்பாற்றக் கூடிய ஆணோ பெண்ணோ இல்லாத பல குடும்பங்களைக் கண்டோம். போரிலோ அதற்கு முன்னரோ அவர்களை இழந்துள்ளனர் அல்லது பாதுகாப்புப் படையினர் விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டு வராதவர்கள். தங்கள் வாழ்விடத்திற்கு வந்தவர்களின் வாழ்வு நாம் நம்புவதுபோல மகிழ்ச்சியானதாக இல்லை.
வீடின்றி, பள்ளியின்றி, மருத்துவமனையின்றி, குடிக்க நல்ல நீர் இன்றி, மின்சாரமின்றி, பிழைக்க வழியேதுமின்றி, சுதந்திரமாக நடமாட உரிமையின்றி... இடம் பெயர்ந்தோர் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பிவிட்டார்கள் என்று கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது என்று தெரியவில்லை” என்று கூறி முடித்துள்ளார்.
வன்னி முகாம்களில் இருந்து தமிழர்களை 4 நாட்களில் விடுவித்தார் என்று போற்றப்படும், “அங்கு எல்லாம் நன்றாக உள்ளது” என்று கூறும் தமிழக முதல்வர் கருணாநிதி இதையெல்லாம் அறிவாரா? மத்திய அரசு வழங்கிய நிதியுதவி எங்கே சென்றது என்று கேட்பாரா? அல்லது இதற்கும் காரணம் பிரபாகரன்தான் என்று கூறுவாரா?