முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » நாடும் நடப்பும் » பழங்குடியினரை துரத்திவிட்டு கனிம வளங்களை கைப்பற்ற அரசு முயல்கிறது: காந்தியவாதி (It is a war against the tribles - Himanshu Kumar)
பழங்குடியினரை துரத்திவிட்டு கனிம வளங்களை கைப்பற்ற அரசு முயல்கிறது: காந்தியவாதி
வியாழன், 19 நவம்பர் 2009( 13:49 IST )
FILE
சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் வாழ்ந்துவரும் பஸ்தார் பகுதிகளில் உள்ள கனிம வளங்களைக் கைப்பற்றி அதனை தனியாருக்கு தாரை வார்க்கவே அரசு மிகப் பெரிய காவல் நடவடிக்கையை முடிக்கிவிட்டுள்ளது என்று அப்பகுதியில் சேவையாற்றிவரும் காந்தியவாதி ஹிமான்சு குமார் கூறினார்.
‘சத்திஸ்கரில் நிலம், வன்முறை, மேம்பாடு’ என்றத் தலைப்பில் சென்னை லயோலா கல்லூரியில் புதன்கிழமை மாலை நடந்த கருத்தரங்கில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் என்றழைக்கப்படும் பகுதியிலுள்ள தாண்டிவாடா மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்து கடந்த 17 ஆண்டுகளாக சேவையாற்றிவரும் காந்தியவாதி ஹிமான்சு குமார் பேசினார்.
பஸ்தார் பகுதியில் உள்ள கனிம வளங்களால் ஈர்க்கப்படும் தொழில் நிறுவனங்கள், அந்தக் கனிம வளங்களைப் பயன்படுத்தி வணிகம் செய்வதற்குத் தடையாகவுள்ள பழங்குடியின மக்களை வெளியேற்ற கடந்த பல ஆண்டுகளாகவே முயற்சித்து வருகின்றனர் என்றும், அதனை எதிர்த்து அந்த மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர் என்றும் கூறிய ஹிமான்சு, தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாக பழங்குடியினரை வெளியேற்றுவதில் அங்குள்ள மாநில அரசு, காவல் துறையினரைப் பயன்படுத்தி நடத்திவரும் வன்முறையால் 700க்கும் அதிகமான கிராமங்களில் வசித்துவந்த பழங்குடியின மக்கள் அடர்ந்த காடுகளுக்குள் துரத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை ஒழித்துக்கட்டவே மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரானப் போர் என்று இப்போது அறிவித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறினார்.
2005ஆம் ஆண்டிலிருந்துதான் பழங்குடியினரை துரத்தியடிக்க திட்டமிடப்பட்ட தீவிர முயற்சி துவக்கப்பட்டது என்றும், அப்போதுதான் சல்வா ஜூடும் என்றழைக்கப்படும் ‘அமைதி இயக்கம்’ தொடங்கப்பட்டதெனக் கூறிய ஹிமான்சு குமார், 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாண்டிவாடாவில் சுரங்கம் தோண்டுவதற்கு சத்தீஸ்கர் அரசுடன் டாடா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அடுத்த ஒரு மாத காலத்தில் சல்வா ஜூடும் தொடங்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, பழங்குடியினரை துரத்தியடிக்க திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே சல்வா ஜூடும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
பழங்குடியினரை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து துரத்திவிட்டு, அப்பகுதியில் உள்ள கனிம வளங்களைக் கைப்பற்ற அரசும், தனியார் தொழில் நிறுவனங்களும் இணைந்து திட்டமிட்டதும், அதற்குத் தடையாக உள்ள பழங்குடியினரை அங்கிருந்து துரத்தியடிக்கவே மாவோயிஸ்ட்டுகளின் பெயரைப் பயன்படுத்துகின்றன என்று கூறிய ஹிமான்சு குமார், தங்கள் வாழ்விடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட 4 இலட்சம் பழங்குடியின மக்களுடன் மாவோயிஸ்ட்டுகளும் இருப்பது உண்மைதான் என்றாலும், அவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவே என்று கூறினார்.
700க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து துரத்தப்பட்ட அடந்த வனப்பகுதிகளுக்குச் சென்றுள்ள மக்களை, சாலையோரங்களில் தாங்கள் அமைத்துள்ள முகாம்களுக்கு வருமாறு சல்வா ஜூடும் அமைப்பும், அரசும் அழைக்கின்றன என்றும், அந்த முகாம்களில் தஞ்சமடைந்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு போதுமான உணவு, இருப்பிடம், குடிநீர் வசதிகளின்றி வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய ஹிமான்சு குமார், அடர்ந்த காடுகளுக்குச் சென்றுவிட்ட 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைத் தான் மாவோயிஸ்ட்டுகள் என்று கூறி, அவர்களுக்கு எதிராக போரைத் துவக்கியுள்ளது சத்தீஸ்கார் அரசு என்று கூறினார்.
தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படுவதை எதிர்க்கும் பழங்குடியினரை எவ்வாறு மாவோயிஸ்ட்டுகள் என்று கூற முடியும் என்று கேள்வி எழுப்பிய ஹிமான்சு குமார், அவர்களை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் காவல் துறையினரும், சல்வா ஜூடும் அமைப்பினரும் பழங்குடியினப் பெண்களை பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்களைச் செய்கின்றனர் என்றும் கூறினார்.
தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகள் தொடர்பாக பழங்குடியினர் புகார் கொடுத்தாலும் அவற்றின் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதில்லை. நாங்கள் புலனாய்வு செய்த பின்னரே புகாரை ஏற்க முடியும் என்று கூறுகின்றனர். காவல் துறை சொல்வதை நீதிமன்றமும் ஏற்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தும் அதனை சத்தீஸ்கர் அரசு கடைபிடிக்கவில்லை. நீதித்துறை, காவல்துறை, அரசு என்று எதுவும் பழங்குடியினருக்காக இல்லை” என்று ஹிமான்சு குமார் கூறினார்.
இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் சல்வா ஜூடும் அமைப்பால் நக்ஸலைட்டுகள் என்று கூறப்பட்டு 19 பேர் கொல்லப்பட்டனர் என்றும், கொல்லப்பட்ட பெண்களில் பலர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பின்னரே குத்திக் கொல்லப்பட்டதாகவும், குத்திக் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் இருந்து குடல் முழுமையாக வெளியே வரும் வகையில் குத்திக் கொல்லப்பட்டனர் என்றும் கூறினார்.