இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்து வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டத் தமிழர்கள் ‘விடுவிக்கப்பட்டு’ தாங்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது அவர்கள் வீடு கட்டிக் கொள்ள 2,600 டன் மின் முலாம் பூசப்பட்ட துத்தநாகத் தகடுகள் (Galvanized corrugated sheets) அனுப்பி வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது 2.65 மில்லியன் டாலர் மதிப்புடைய நிவாரண உதவி என்றும், இதே மதிப்பிற்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதல் தவணையாக 2,600 மெட்ரிக் டன் அளவிற்கு துத்தநாதத் தகடுகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கொழும்புவிலிருந்து வெளியிடப்பட்ட தூதரக அறிக்கை தெரிவிக்கிறது.
FILE
இதுமட்டுமின்றி, தங்கள் வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படும் தமிழர்கள் தாங்கள் மேற்கொண்டு வந்த விவசாயத் தொழில் செய்ய 50,000 குடும்பங்களுக்கு உழவுக் கருவிகளும் அனுப்பப்படும் என்றும், ஏற்கனவே இதேபோன்று 20,000 குடும்பங்களுக்கு உழவுக் கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அத்தோடு அந்த அறிக்கை நின்றிருந்தால் இந்திய அரசுக்கு தமிழர்களின் நலனில் அக்கறை இருப்பதாகக் கூட புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களர் பகுதிகளின் மேம்பாட்டிற்கும் நிதியுதவி செய்யும் விவரமும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
இலங்கையின் தென் பகுதியில் உள்ள மாத்தரையிலிருந்து கொழும்புவிற்கு - 100 கி.மீ. தூர இரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு மேலும் 67.4 மில்லியன் டாலர் கடன் அளிக்க இந்திய அரசு முன்வந்துள்ளதாகவும் கூறியுள்ள தூதரக அறிக்கை, ஒரு முக்கிய விவரத்தையும் தருகிறது.
கொழும்பு - மாத்தரை இரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு ஏற்கனவே இந்திய அரசு 100 மில்லியன் டாலர்கள் (ரூ.500 கோடி) அளித்துள்ளது என்பதுதான் அந்தத் தகவல்!
இந்த நிதியுதவி Line of Credit என்ற வசதியின் கீழ் அளிக்கப்பட்டதாகவும், அதோடு கூடுதலாக இப்போது மேலும் 67.4 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்யப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Line of Credit என்ற அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட கடன் தொகையை தனது வாடிக்கையாளருக்கு வங்கி ஒதுக்கும். அந்த தொகையை அவர் எப்போது பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறாரோ அப்போது அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் வசதி என்னவென்றால், அதனை வாங்கி பயன்படுத்தும்போதுதான் அதற்கு வட்டி கணக்கிடப்படும். அந்த அடிப்படையில் சிறிலங்க அரசிற்கு இந்தியா நிதியுதவி செய்கிறது. அதிலிருந்துதான் 100 மில்லியன் டாலர் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடன் தொகை எவ்வளவு என்பதும், அதன் கீழ் எப்போதெல்லாம் கொடுக்கப்பட்டது என்பதும் இங்குள்ள மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இந்தியத் தூதரக அறிக்கைக் கூட கொழும்பு ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டதுதானே தவிர, இந்திய ஊடகங்களுக்கு அல்ல. இதனை விக்ரமாதித்தன் பத்திரிக்கை விவரமாக வெளியிட நாம் அறிந்துகொள்ள முடிந்தது!