நமது நாட்டின் பொருளாதார வாழ்வில் பழங்குடியினருக்கு உரிய இடத்தைத் தராததும், அவர்களை எந்த விதமான சமூக, பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளிலும் பங்கேற்க அனுமதிக்காது தனிமைப்படுத்தியதும் ஒரு அபாயகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று டெல்லியில் நேற்று நடந்த வன உரிமைச் சட்ட நடைமுறைப்படுத்தல் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளது விவாதத்திற்குரியதாகியுள்ளது.
பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வன வாழ் மக்கள் உரிமைகள், நலன்கள் பாதுகாப்பிற்கான முதலமைச்சர்கள் மற்றும் மாநில வன அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இந்திய சமூகத்தில் புறக்கணிப்பிற்கு உள்ளாகியுள்ள பழங்குடியினரின் உரிமைகளை சட்ட ரீதியாக அங்கீகரிக்காமல் சரிசமமான வளர்ச்சி சாத்தியமாகாது என்றும், அதற்கு 2006ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர வன வாழ் மக்கள் (உரிமைகள் அங்கீகாரச்) சட்டத்தை (The Scheduled Tribe and Other Traditional Forest Dwellers (Recognition of Rights) Act, 2006) முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“பல நூற்றாண்டுகளாக வனங்களில் வசித்துவரும் பட்டியல் பழங்குடியினரும், மற்ற மக்களின் உரிமைகளும், வனங்களைக் அழியாமல் கட்டிக்காத்ததில் அவர்களின் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களின் உரிமைகளை நிலைப்படுத்தவும், வனத்தையும், உயிரியல் பரவலையும், சூற்றுச் சூழல் சம நிலையை காத்திடவும், மதிப்புடைய நமது வனச் செல்வங்களைக் காத்திடவுமான பொறுப்புக்களை பகிர்ந்தளிக்க இச்சட்டம் வழி செய்கிறது” என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
துப்பாக்கியின் நிழல் வந்தது ஏன்?
பழங்குடியின மக்களின் மீது பிரதமருக்கும், மத்திய அரசிற்கும் திடீரென்று இப்படி கரிசனம் பிறந்தது ஏன் என்கின்ற கேள்விக்கும் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையில் பதிலுள்ளது.
“நமது நவீனப் பொருளாதார வாழ்வில் பழங்குடியினருக்கு உரிய இடத்தைத் தராததும், அப்படிப்பட்ட தனிமைப்படுத்தல் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்ததும் இப்போது அபாயகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடி சமூகத்தினரை சமூகப் பொருளாதார ரீதியாக திட்டமிட்டுச் சுரண்டுவதை இதற்கு மேலும் சகித்துக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் துப்பாக்கி நிழலில் எந்த ஒரு நீடித்த நடவடிக்கையும் சாத்தியமில்லை” என்று பிரதமர் கூறியுள்ளார்.
FILE
இதன் பொருள், பல பத்தாண்டுகளாக சமூக, பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்டு வந்த பழங்குடி சமூகத்தினர் இன்று துப்பாக்கிகளின் (மாவோயிஸ்ட்டுகள் என்பதைப் புரிந்து கொள்க) நிழலில் அடைக்கலம் தேடியுள்ளனர் என்பதையும், அப்படித் துப்பாக்கி ஏந்தியவர்களால் ஒரு மாற்று பொருளாதார, சமூகத் திட்டத்தை அளிக்க முடியாது என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
“வன்முறைக் கலாச்சாரம் சாதாரண மக்களுக்கு மேலும் துயரத்தைத்தான் சேர்க்கும், வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது, அதன் அச்சுறுத்தலை உறுதியாக நின்று ஒழித்திட வேண்டும்” என்று மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்பதில் அரசிற்கு உள்ள ‘உறுதிப்பாட்டை’யும் அம்மாநாட்டில் பிரதமர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.