இதையெல்லாம் தமிழ்நாட்டின் நாளிதழ்களும், வார இதழ்களும் பக்கம் பக்கமாக திட்டி ஓய்ந்துவிட்டன. அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட மத்திய அரசை வலியுறுத்தப்போவதாக காஞ்சியில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவித்தபோது கூட, முதலில் அவர்களுக்கு முகாம்களில் இருந்து விடுதலை கொடுங்கள், அவர்களை சுதந்திரமாக நடமாடவும், விரும்பும் தொழிலைச் செய்யவும் அனுமதியுங்கள் என்று கோரி சென்னையில் கூட ஆர்ப்பார்ட்டம் நடந்தது.
இவர்கள் மட்டுமின்றி, செங்கற்பட்டிலும், பூவிருந்தவல்லியிலும உள்ள சிறப்பு முகாம்களில் சிறிய வழக்குகள் போடப்பட்டு 70க்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி பல முறை பட்டினிப் போராட்டம் நடத்தியுள்ளனர். விடுதலை செய்வதாகக் கூறி ஒவ்வொரு முறையும் அவர்களை ஏமாற்றுகின்றனர். கடைசியாக அவர்கள் நடத்திய பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து ஒரு 10 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களையும் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக நாட்டை விட்டு வெளியேற்றுவதில் தமிழக காவல் துறை தீவிரம் காட்டியதாக செய்திகள் வந்தன.
எனவே, சிறப்பு முகாம்கள் உட்பட இங்குள்ள 117 முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள 73,000 ஈழத் தமிழ் அகதிகளை முகாம்களில் இருந்து விடுவித்து, அவர்கள் தங்கள் உறவினர்களோடு வாழ விரும்பினால் வாழ அனுமதிக்க வேண்டும். தொழில் செய்ய விரும்பினாலோ அல்லது வேலை பார்க்க விரும்பினாலோ எவ்வித தடையும் கூறாமல், நிபந்தனை விதிக்காமல் அதற்கெல்லாம் அனுமதி வழங்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் பிள்ளைகள் இங்கு கல்வி கற்க முழு அனுமதியும், முன்னுரிமையும், அவர்கள் படிக்க நிதி உதவியையும் தமிழக அரசு அளிக்க வேண்டும். இதுதான் மிக முக்கியமானது. கடந்த ஆண்டு மேனிலைப் பள்ளித் தேர்வில் 1,200 ஈழத்துப் பிள்ளைகள் தேர்ச்சி பெற்றார்கள், ஆனால் அவர்களை மேல்படிப்பில் சேர்க்க முடியாமல் பல தடைகள். அவர்களை சேர்க்கக் கூடாது என்று ஒரு வாய் வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவே அவர்கள் குமுறினார்கள். இந்த நிலை மாறவேண்டும். தாய் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் பிள்ளைகளுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்படுமானால் அதனை விட கொடுமை வேறென்ன இருக்க முடியும்?
எனவே, தமிழக முதல்வர் ஈழத் தமிழ் அகதிகள் சுதந்திரமாக வாழவும், அவர்கள் நினைக்கும் தொழில் அல்லது பணி செய்யவும், அவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கவும், அதற்கு உரிய நிதி உதவு செய்யவும் முன்வர வேண்டும். அதுவே தமிழின உணர்விற்கு அவர் செய்யும் சரியான பங்கீடாக இருக்கும்.