இது மட்டுமல்ல, தங்களுடைய பிரச்சனை கச்சத் தீவு அல்ல, சிறிலங்க கடற்பரப்பில் சென்று மீன் பிடிப்பதே என்றும், அதற்கு அனுமதி வேண்டும் என்றே தமிழக மீனவர்களே கூறுகின்றனராம்! ஆனால் அப்படிப்பட்ட உரிமையை இறையாண்மையுடைய சிறிலங்க அரசுதான் தர முடியுமா? அல்லது இறையாண்மை கொண்ட மத்திய அரசுதான் அப்படிக் கேட்க முடியுமா? என்று மிகுந்த மிகுந்த சட்ட ஞானத்துடன் கேட்டுள்ளது!இனப் படுகொலை செய்வதற்கே இறையாண்மையை காரணம் காட்டும் அரசின் அறிவிக்கப்படாத அரசிதழாக உள்ள அந்த நாளிதழ், விடுதலைப் புலிகள் சிறிலங்க அரசால் இராணுவ ரீதியாக ஒடுக்கப்பட்டதால் ஏற்பட்ட கசப்புணர்வின் காரணமாக தமிழ் மொழி வெறியாளர்களே இப்படிப்பட்ட குரலை எழுப்புகிறார்கள் என்று கூறுகிறது. இந்திய, சிறிலங்க நாடுகளின் பிரதமர்கள் கையெழுத்துப் போட்டு நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை அவமதிப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சிறிலங்க சிங்கள அரசின் சார்பாக தனது குரலை ஓங்கி ஒலித்துள்ளது அந்த நாளிதழ்.முதல் ஒப்பந்தத்தின் உண்மை என்ன? இரு நாட்டுப் பிரதமர்களான இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதியும் (இந்திரா காந்தி கையெழுத்திட்ட நாள்), அதே மாதம் 28ஆம் தேதியும் (சிறிமாவோ பண்டாரநாயகா கையெழுத்திட்ட நாள்) செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரிவு 5-ன்படி (Article 5) கச்சத் தீவிற்கு இதுவரை சென்று வந்ததைப் போல மீனவர்களும், யாத்ரிகர்களும் (அங்குள்ள அந்தோனியார் கோயிலிற்கு) எந்த பயண ஆவணங்களுமின்றி சென்று வரலாம் என்று குறிப்பட்டுள்ளதை மட்டுமே அந்த நாளிதழ் சுட்டிக் காட்டுகிறது.ஆனால் அந்த ஒப்பந்தம் குறித்த சுருக்கத்தில் (Summary), இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று அடிப்படையிலான நீர் எல்லைகளைச் சம தூர அடிப்படையில் வரையறை செய்துகொள்கிறது. ஆயினும், இரு தரப்பினரதும் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை பாதுகாக்கிறது என்று தெளிவாக குறிப்பிடுகிறது. எப்படி இந்திய - சிறிலங்க கடற்பரப்பில் இரு நாட்டுக் கப்பல்களும் சென்று வந்த பாரம்பரிய போக்குவரத்து காப்பாற்றப்படும் என ஒப்பந்ததின் பிரிவு 6 கூறுகிறதோ, அதே அடிப்படையில்தான் பாரம்பரிய மீன் பிடி உரிமையும் பாதுகாக்கப்படும் என்று 1974 ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மீன் பிடி உரிமை 1974 ஒப்பந்தத்திற்குப் பிறகும் இருந்தது நிரூபிக்கப்படுகிறது.கச்சத் தீவு ஒப்பந்தத்திற்குப் பிறகும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை இருந்ததை, அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் (மக்களவையில்) நடந்த விவாதத்திற்குப் பதிலளித்த அன்றைய அயலுறவு அமைச்சர் சுவரன் சிங் உறுதிபடுத்தியுள்ளார். எனவே இந்தியாவும், சிறிலங்காவும் எல்லை வரையறை செய்துகொண்டதனால் கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடி உரிமையை நமது மீனவர்கள் இழந்துவிட்டனர் என்று கூறுவது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.கச்சத் தீவு யார் எல்லைக்குள்? எப்படி வந்தது?அது மட்டுமல்ல, இந்தியா - இலங்கை இடையிலான கடற்பகுதி சம தூர அளவு (Equal distance from the coast lines) என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகக் கூறப்படுவதிலும் பிழை உள்ளது. இதனை அப்பொழுது இந்திய அரசின் சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்கள் துறையின் இயக்குனராக இருந்த எஸ்.பி. ஜகோட்டா இவ்வாறு கூறியுள்ளார்: According to SP Jagota, then Director of the Legal and Treaties Division, “the boundary line between India and Sri Lanka followed the median line except as adjusted in the Palk Bay in relation to the settlement on the question of the Island of Kachchativu” அதாவது, இரு நாடுகளின் கரைக்கு இடையிலான சம தூர அடிப்படையில்தான் கடல் எல்லை வகுக்கப்பட்டது, ஆனால் கச்சத் தீவுப் பகுதியில் மட்டும் அதனை அந்த சம தூர அளவு பின்பற்றப்படாமல் அதனை இலங்கை கடற்பகுதிக்குள் வருமாறு எல்லை வகுக்குப்பட்டது என்கிறார். இது அப்பகுதியின் இன்றைய சர்வதேச எல்லைக் கோட்டு வரைப் படத்தை பார்த்தாலே வளைத்து வரையப்பட்டது தெரியும். எனவே எல்லை வகுத்ததனால் கச்சத் தீவுப் பகுதி இலங்கைக்கு உரியதாகிவிட்டது என்று ஆங்கிலத்தில் கதை விட்டால் அது உண்மையாகிவிடாது. |